கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 2வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி தியானத்தை தொடங்கினார் .
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நாளை (ஜுன் 1) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து எம்ஐ-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் நேற்று மாலை தியானத்தை தொடங்கினார். இந்த தியானம் இன்று வரை தொடரும். அதன்பின் இன்று (ஜூன் 1) பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டில்லி செல்கிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் சோதனைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார்.