மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சியின் இணை நிறுவனர் டின் ஓ (வயது 97). கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றிக்கு ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான இவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி 2021-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் டின் ஓவின் உடல்நலம் சரியில்லாததால் அவர் தொடர்ந்து வீட்டுச்சிறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.