தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் தொடர் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக ‘மகாராஜா’ திரைப்டம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த பதாகை ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. இதனிடையே சமீபத்தில் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாயே தாயே’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.