நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நெல்லை மாநகரில் பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வள்ளியூர், ராதாபுரம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் அதிக பட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே சாரல் மழை பெய்து வந்த நிலையில் கனமழை பெய்தது. பகலில் தொடங்கி மாலை வரையிலும் பெய்த கனமழையின் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.10 அடியாக இருந்த நிலையில், தொடர் கனமழையின் காரணமாக ஒரே நாளில் 4½ அடி உயர்ந்து 81.80 அடியை எட்டியது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 91.14 அடியாக இருந்த நிலையில் 101.64 அடியை எட்டியது. ஒரே நாளில் அந்த அணையின் நீர்மட்டம் 10½ அடி கூடியுள்ளது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 850 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் இன்று (ஜூன் 9) காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 2 கனஅடி நீர் அணைகளுக்கு வந்து கொண்டிருந்தது.
பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டரும், சேர்வலாற்றில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.27 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 10.8 சென்டி மீட்டரும், ஊத்து பகுதியில் 9 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. அடவிநயினார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடு முடியாறு அணையில் 16 மில்லிமீட்டரும், கருப்பாநதி, குண்டாறு அணைகளில் தலா 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
கருப்பாநதி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 20.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 58 அடியாகவும் இருக்கிறது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. மேலும் இதமான காற்றும் வீசியதால் ரம்மியமான சூழல் நிலவியது.