வேலூர் மாவட்டம், லத்தேரி எட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர், “எனக்கும், அரக்கோணத்துக்கு அருகேயுள்ள அகநகர் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் ஜூன் 10-ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, முகூர்த்த புடவை எடுப்பதற்காக கடந்த மாதம் 26-ம் தேதி மாப்பிள்ளை வீட்டார் என்னை காஞ்சீபுரத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது, `மாப்பிள்ளைக்கு கைக்கு பிரேஸ்லெட், மோதிரம், கழுத்துக்கு கனமான தங்க செயின் என 15 பவுன் போட வேண்டும்’ என்று மாப்பிள்ளையின் தங்கை என் பெற்றோரிடம் திடீரென தகராறு செய்தார். இதனால், திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்துவிட்டோம். இதையடுத்து, `மாப்பிள்ளைக்கு நகைகள் போட வேண்டாம். பெண்ணுக்கு மட்டும் நகைப் போட்டு அனுப்புங்கள்’ என்று மாப்பிள்ளையின் பெற்றோர் சொன்னதால், திருமணத்துக்கு ஒப்புக்கொண்டோம். இதனால், திருமண ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வந்தோம். கடந்த 9-ம் தேதி மாலை திருத்தணி கோயில் மண்டபத்தில் வரவேற்பும், மறுநாள் காலை திருமணமும் நடக்கவிருந்தது. திருமண வரவேற்பையொட்டி நடைபெற்ற மணமகன் அழைப்பின்போது, மாப்பிள்ளையின் தந்தை `இப்போதே என் பையனுக்கு தங்க பிரேஸ்லெட், தங்க செயின் போடணும். வரதட்சணையாக சில லட்சம் ரொக்கமாகவும் தரணும். இல்லைனா, இந்த கல்யாணம் நடக்காது. மணமேடைக்கு மாப்பிள்ளையையும் அனுப்ப மாட்டோம்’ என்று பிடிவாதம் காட்டினார். இதனால் ஏற்பட்ட தகராறால் திருமணம் நிறுத்தப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால், நானும், என் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவின்மீது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.