விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகள் போட்டியிடுவது பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் திமுக வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவர் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் மற்றும் அணியின் மாநில செயலாளர் ஆவார். இது மட்டும் இன்றி திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அறிவிக்கப்பட்டுள்ளது.