தென் தமிழகமான திருநெல்வேலி மாவட்டத்தில்கடந்த வரும் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட சாதி தகராறில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், தற்போது தென்காசி மாவட்டமாகியுள்ள பழைய திருநெல்வேலியின் ஒரு பகுதியான சங்கரன்கோவில் அருகே பெட்டிக் கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்து தீண்டாமையை கடைப்பிடித்தது, கடந்த மாதம் இரு வேறு சமூகத்துக்கிடையே நடைபெற்ற கொலைச் சம்பவம் என நெல்லை மண்ணில் நடைபெறும் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் சாதி தான் பின்புலமாக இருக்கிறது என்பது பெரும் வேதனை. இந்நிலையில் தற்போது, 14.06.2023 அன்று சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததாக ரெட்டியார்பட்டியில் உள்ள திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் ஆண்களும், பெண்களுமாக சுமார் 30 பேர் உள்ளே நுழைந்து, அங்கிருந்த நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த சேர், டேபிள், அலுவலக கண்ணாடிகளை உடைத்து, கட்சி அலுவலகத்தை சூறையாடி விட்டு சென்று விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயதட்சாயினி(23). இவர், பாளையங்கோட்டை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த மதன்(28) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், காதல் ஜோடிகள், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காதலர்கள் இருவருக்கும் 13.06.2024 அன்று சாதி மறுப்பு சீர்திருத்த திருமணம் செய்து வைத்தனர். அதே நேரத்தில், பெண்ணின் பெற்றோர்களோ மகளைக் காணவில்லை என பெருமாள்புரம் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 14.06.2024 அன்று மாலையில் புதுமணத் தம்பதிகள் ரெட்டியார்பட்டியில் உள்ள இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருப்பதாக பெண்ணின் வீட்டாருக்குத் தகவல் தெரிந்துள்ளது. இதையடுத்து, பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்த சேர், டேபிள், அலுவலகக் கண்ணாடிகள் என அனைத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த 2 போலீஸார் மற்றும் 4 கட்சியினரும் லேசான தாக்குதலுக்குள்ளாயினர். இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த வழக்கறிஞர் பழனி தெரிவித்ததாவது, “எங்களது கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 போலீஸார், 4 தோழர்கள் லேசான காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் மட்டும் வயோதிகத்தினால் 41ஏ சம்மன் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட சாதிய அமைப்பில் இளைஞரணியில் நிர்வாகியாக உள்ள பந்தல் ராஜா எனபவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.