சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு, கடல் சீற்றம் போன்றவை காணப்படும். இந்த ஆண்டும் கடல் சீற்றம் தொடங்கியுள்ளது. மேலும், “கள்ளக்கடல்” எனப்படும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2 முதல் 2.1 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
எனவே கடலோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கி உள்ளது. மலையோர பகுதிகள், அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.68 அடியாகும். அணைக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 632 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.08 அடியாகும் அணைக்கு 132 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
சிற்றாறு- 1 ல் 16.27 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 101 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சிற்றாறு-2 ல் 16. 37 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.9 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 40.19 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.9 அடியாகும்.