அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கனமழையால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாநிலமான அசாமில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 43 நிவாரண முகாம்களில் 5,114 பேர் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று இரவு கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பதர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண், அவரது மூன்று மகள்கள் மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 மாவட்டங்களில் வசித்து வந்த 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,378.64 ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 54,877 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிஸ்வநாத், லக்கிம்பூர், ஹோஜாய், போங்கைகான், நல்பாரி, தமுல்பூர், உடல்குரி, தர்ராங், தேமாஜி, ஹைலகண்டி, கரீம்கஞ்ச், கோல்பாரா, நாகோன், சிராங் மற்றும் கோக்ரஜார் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.