முதலமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்
மாணவர்களிடம் பரவி வரும் சாதிய வன்முறைகளைத் தவிர்ப்பதற்கான அறிவுரை வழங்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு குழு மிகச்சிறந்த பரிந்துரைகளை அளித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். அப்பரிந்துரைகள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.
நீதிபதி கே. சந்துரு குழு அளித்துள்ள பரிந்துரைகளில் முதன்மையானவை வருமாறு:
1. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களில் சாதி அடையாளத்தை நீக்குதல்.
2. பெயர் அகரவரிசைப்படி மாணவர்களை வகுப்பறைகளில் உட்கார வைத்தல். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மட்டும் விதிவிலக்கு அளித்தல்.
3. பெயர்ப் பதிவேடுகளில் மாணவர்களின் சாதி குறித்த எத்தகைய குறிப்பும் இருக்கக் கூடாது.
4. பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், நிர்வாகத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கான ஒழுக்க விதிமுறைகளை வகுத்துச் செயற்படுத்த வேண்டும்.
5. ஒவ்வொரு பள்ளியிலும் அல்லது கல்லூரியிலும் சமூக நீதி மற்றும் மாணவர் படை உருவாக்கவேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இது இயங்கவேண்டும். அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் சேர்க்கப்பட்டு சாதி, சமூகத் தீமைகளை அறவே அகற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும்.
6. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதியினர் பெரும்பான்மையினராக வாழும் இடங்களில் பணிகளுக்கு நியமிக்கப்படக் கூடாது.
7. கல்வி நிலையத்தின் எல்லைக்குள் அலைப்பேசிகளை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கவேண்டும்.
8. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் நல்லொழுக்க வகுப்புகள் வாரத்திற்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும்.
9. 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் பள்ளி நல அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டும்.
10. சாதித் தீமைகள் அதிகமாக இருக்கும் பகுதிகள் எவை என்பதை ஆராய்ந்து முடிவு செய்வதோடு, அங்கு சாதி மோதல்கள் ஏற்படுவதை முன்னதாகவே கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.
11. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சாதித் தீமைப் பற்றிய பாடம் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டும்.
12. சாதிய உணர்வுடன் இயங்கும் ஆசிரியர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்படவேண்டும்.
13. சாதி அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவர்களின் கரங்களில் வண்ணக் கயறு கட்டுதல், மோதிரங்கள் அணிதல், நெற்றியில் குறியீடுகளை இடுவது, சாதிக் குறிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருதல் போன்ற பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கலக்கும் சாதி உணர்வுகளை வெளிப்படுத்துதல் அறவே தடை செய்யவேண்டும்.
மேலும் பல சிறப்பான பரிந்துரைகளை நீதிபதி சந்துரு வழங்கியதன் மூலம் ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழித்துவரும் சாதிப் பாகுபாடுகளை அறவே அகற்றுவதற்கும், சாதியற்றச் சமுதாயம் உருவாவதற்கும் அவர் வழிகாட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தியும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் வருபவர்களைத் தவிர, மற்ற அனைவரும் நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை ஏற்று மனமாறப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. தாமதமின்றி இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்தத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)
தலைவர்.