இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது அங்கு ஆயிரக்கணக்கான இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய புலம்பெயர் தொழிலாளர் சத்னம் சிங்(31) என்பவர் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியுள்ளது. இதனால் அவர் வலியில் அலறித் துடித்துள்ளார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அவரை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் சத்னம் சிங்கை அவரது வீட்டின் அருகே சாலையில் வீசி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சத்னம் சிங்கை மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்னம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இத்தாலியில் உள்ள இடது சாரி அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே இத்தாலி அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் மரினா கால்டரோன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும், இதில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
![இந்திய தொழிலாளி இத்தாலியில் உயிரிழப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Indian-worker-ital-pali.jpg)