நமது அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். டில்லியில் மாலை அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். நாளை காலை ஷேக்ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர். பின்னர் ஷேக் ஹசீனா அதிபர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் அதிபர் திரவுபதி முர்மு, மற்றும் துணை ‘அதிபர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார். இந்த மாதத்தில் ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார்.
![வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Bangladesh-pm-sheikh-hasina-india-2-days-visit.jpg)