அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் திரள்வார்கள். பவுர்ணமி தினத்தையொட்டியும் ஏராளமானோர்கள் வருவார்கள். அந்த வகையில் பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலுள் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். மேலும் நேற்று குபேர பவுர்ணமியாகும். இதை முன்னிட்டு மாலையில் இருந்து அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் கோவிலில் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர். காலை அவர்கள் கடற்கரையில் நீராடினர். பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியது. இதனால் அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்தனர்.