பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை பாஜக பிரமுகர்கள் வசூல் செய்வதாக பகீர் கிளப்பியுள்ளார்.
பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் திருச்சி சூர்யா. இவர் அளிக்கும் நேர்காணல்களும், சமூக வலைதளங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துக்களும் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும்.
மக்களவைத் தேர்தலின் போது திருச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் ராம சீனிவாசன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சூர்யா, மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்.
இதனை தொடர்ந்து பேராசிரியர் ராம சீனிவாசன் மதுரை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். திருச்சி சூர்யா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் திருச்சி சூர்யா.
அதன் பின்னர் வேறு சில கட்சிகளில் அவர் இணையுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பாஜகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டார்.
இது தொடர்பான அறிவிப்பை பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டார். தான் கட்சியில் இருந்து நீங்கப்பட்டது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட திருச்சி சூர்யா அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டதால் தான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்ததாகவும் தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் தனது தலைவனை பேசியதற்காக தான் பதிலளித்ததாகவும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். எந்த நிலையிலும் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவராகவே இருப்பேன் என்றும் இனி தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் தனக்கு இல்லை, சுயமரியாதை முக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்து பெரும் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ட்வீட்டை பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் திருச்சி சூர்யா. அதில் மணல் கடத்தல் கும்பலிடம் பாஜக பிரமுகர்கள் மாதம் தோறும் 50 லட்சம் முதல் 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.