கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உறவினரின் வீட்டில் வைத்து நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பின்னர் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். ராசலீலா, சாந்து பொட்டு, திளக்கம், சிரிக்குடுக்கா, வர்கம் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது அந்த வீட்டில் வைத்து பக்கத்து வீட்டை சேர்ந்த நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் மற்றும் கேரள டிஜிபியிடம் புகார் செய்து உள்ளனர்.