நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்களவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து இன்று சபையில் தனியே விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும்போது, மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அமைச்சர் அர்ஜூன் ராமை பேச அழைத்தார்.
ராகுல் காந்தியின் மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது. படிக்காமல் குறுக்கு வழியில் ரூ. 25 லட்சம் கொடுத்து வினாத்தாளை வாங்கி மருத்துவராக முடியும் என்பதை காட்டிக்கொடுத்துள்ளது. அவ்வாறு வரும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் மக்களின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.