முன்னாள் துணை அதிபர் ஹமீத் அன்சாரியை விமர்சித்து பேசியதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அவை தலைவர் ஜக்தீப் தங்கருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கருக்கு காங்., கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 2ம் தேதி அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, ராஜ்யசபாவில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்புறத்திற்கு ஆதரவாக இருந்தது என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. பிரதமர் மோடி செய்ததைப் போல், வேறு எந்த பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்து பேசியது இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்