திருநெல்வேலியில் நடந்த அரசு விழாவில் ரூ.1060.76 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம், ரெட்டியார்பட்டியில் ரூ.85.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 768 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் அவர், ரூ 77.02 கோடியில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள மெகா உணவு பூங்கா திட்டம் உள்ளிட்ட ரூ. 309.05 மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 75,151 பேருக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இன்று காலையில், தினசரி பத்திரிகையில் பல்வேறு கோரிக்கைகளை படித்துப் பார்த்தேன்.
செய்திகளாக போட்டிருக்கிறார்கள். நல்ல எண்ணத்தோடு சில பேர் போட்டிருக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடனும் சில பேர் போட்டிருக்கிறார்கள். அது வேறு. எந்த செய்தியாக இருந்தாலும் நான் படிப்பேன். அதில் தவறுவதில்லை. ஆகவே, உங்களை பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கின்ற நான் புது அறிவிப்புகளை அறிவிக்காமல் இங்கிருந்து போகமுடியுமா? நேரு அவர்கள் என்னை விட்டுவிடுவாரா? திருநெல்வேலி மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில், 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்படும்.
அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். திருநெல்வேலி மாநகரத்தில், மதுரை குமரி சாலையில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் இடையே குலவணிகர் புரத்தில் இருக்கும் இரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றாக, புதிய ஒய் வடிவ இரயில்வே மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
திருநெல்வேலி மாநகராட்சியில், புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்சாலைகளுக்கும், மற்ற தொழில் பூங்காக்களுக்கும் பயன்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்கவும் தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும் வழிவகை ஏற்படும். பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மேலப்பாளையம் பகுதியில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
அம்பாசமுத்திரம் வட்டம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மீனவப் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில், கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். நான் இப்போது அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம், விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்..
இவ்வாறு அவர் கூறினார்.