மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மத்திய பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் நேற்று 72 இடங்களில் திமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. டில்லியில் திமுக மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டி தமிழ்நாடு எம்.பி.க்கள் போராடினர். தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது.
பட்ஜெட்டில் மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துள்ளது. யுஜிசி புதிய வரைவு விதி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டித் தந்த தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராது மத்திய அரசு வஞ்சிக்கிறது. உ.பி., பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே மத்திய அரசு நிதி தருகிறது. அளிக்க வேண்டி நிதியை கூட மத்திய அரசு இன்னும் அளிக்கவில்லை. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை கூட கண்டிப்பதற்கு பிரதமர் மோடி குரல் கொடுக்கவில்லை. நான் ஒரு தமிழச்சி தான் என கூறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா தமிழ்நாட்டிற்காக செய்தது என்ன?” இவ்வாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.