ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தி வருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுகள் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லாத போதிலும், அதில் எடுக்கப்படக் கூடிய தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு நாடாக இருப்பதால், அமெரிக்காவுடனும் பேசியிருப்பதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுகள் அடுத்த வாரத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் பிரதான அனுசரணை நாடுகள் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப் போகின்றன என்பது தொடர்பாக, இங்குள்ள தூதுவர்கள் தமது அரசாங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பெரும்பாலும் அடுத்தவாரம் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவார்கள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அனுசரணை நாடுகளின் கருத்துக்களை அறிந்த பின்னரே இந்த விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதையிட்டு தீர்மானிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்