பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார். அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு காணொளி ஆதாரம் உள்ளது என்றும், புகார் இல்லாமலேயே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.