தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29 முதல் மே 5ம் தேதி வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்பட உள்ளது. சட்டசபையின் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடைபெறும். பள்ளிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும். தமிழில் சிறந்து விளங்கும் இளம் கவிஞருக்கு ‘பாரதிதாசன் இளம் படைப்பாளர்’ விருது வழங்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “எளிமையான சொற்கள் மூலம் வலிமையான கருத்துக்களை சொன்னவர் பாரதிதாசன் . நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும். செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும்” என்று கூறினார்.