அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். அவருடைய மனைவியும், இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் வந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ உயர் அதிகாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி உள்பட 5 உயர் அதிகாரிகளும் வருகை தந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு அறிவித்த பிறகு, ஜே.டி.வான்ஸ் முதல்முறையாக இந்தியா வந்ததால் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றது. மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி-ஜே.டி.வான்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், வரிவிதிப்பு, பிராந்திய பாதுகாப்பு ஆகியவை பேச்சுவார்த்தையில் இடம் பெற்று இருக்கலாம் எனத்தெரிகிறது.
