மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்க வேண்டும் என கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று மன்றில் முன்னிலையாகாத பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை வழங்கவும் நீதிமன்று உத்தரவிட்டது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தலை நடத்தவுதற்கு தடை விதிக்க விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான மணிவண்ணன், சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 38 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட்-19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கடும் வாதப் பிரதிவாதங்குளுக்குப் பின்னர், கட்டளைக்காக வழக்கு வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.