மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலம் சென்றார். மிதிலா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து பேசினார். ராகுல் காந்தி கார் வாசலில் நிறுத்தப்பட்டது. பின்னர் நடந்து சென்று மாணவர்களை சந்தித்தார். மாணவர்களுடன் உரையாடும்போது அவர் கூறியதாவது: அரசியலமைப்பு உங்களுடைய தலையால் தொட்டு வணங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் நாங்கள் கூறினோம். இறுதியில் அதைச் செய்தார். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினோம். இரண்டிலும், மக்களிடம் இருந்து எதிர்வினை ஏற்படும் என பயந்து பிரதமர் மோடி, ஏற்றுக்கொண்டார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி, அதானி மற்றும் அவர்களைப் போன்றவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது என்பது உண்மைதான். தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுத்து வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
