நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் தொடர்பாக, நாளை மறுநாள் உத்தரவிடுவதாக நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்று, கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிடட 14 பேர் கொண்ட குழுவினரால் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், புரந்திரன் எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா, துஷ்யந்தி சிவகுமார் மற்றும் ஹாரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை நவம்பர் 25ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஆறு பொலிஸ் நிலையங்கள் இம்முறை நவம்பர் மாதம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும்படியான கட்டளையினை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே கடந்த வெள்ளிக்கிழமை மாலை பெற்றிருந்தார்கள்.
இந்த உத்தரவுகளானது 106 பிரிவு 1இன் கீழ் எடுக்கப்பட்டவை இதனை 106 பிரிவு 4இன் கீழ் நீதிமன்றம் நீக்கலாம் அல்லது மாற்றலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது இதன் பிரகாரம் இன்று நகர்த்தல் பத்திரங்கள் இந்த ஆறு வழக்குகளிலும் பதிவுசெய்து இன்று திறந்த நீதிமன்றிலே இந்த கட்டளைகள் நீக்கப்படவேண்டும் என்று சமர்ப்பணங்கள் செய்திருந்தேன்.
இந்த குறித்த நியாயாதிக்கமானது நீதவானுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற நியாயாதிக்கமானது அத்தியாயம் 9இன் கீழே பொதுத் தொல்லைகளை தடுப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்பிடியான நியாயாதிக்கத்துக்கு கீழே இங்கே கொடுக்கப்பட்டவாறான கட்டளைகள் கொடுப்பதற்கு நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்கின்ற பிரதானமான வாதத்தோடு குற்றச் சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு உரித்துண்டு.
ஆனால் ஒரு குற்றச்செயலை செய்யக்கூடாது அல்லது செய்யவேண்டாம் என்று தடுப்பதற்கான உத்தரவுகளை இந்த அத்தியாயத்தின் கீழே பெறமுடியாது என்ற வாதத்தினையும் நீதிமன்றத்திலே சமர்ப்பணமாக செய்திருக்கிறோம்.
இதனை செவிமடுத்த நீதவான் இது சம்மந்தமாக தன்னுடைய கட்டளையை எதிர்வரும் புதன்கிழமை 25ஆம் திகதி கொடுப்பதாக கூறி வழக்கினை 25ஆம் திகதிக்கு பிற்போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.