தனது கோரிக்கையை நிறைவு செய்யும் இயலுமை தங்களுக்கில்லை என கருதும் பட்சத்தில், அரசியல் யாப்பில் உங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மரண தண்டனை வழங்கி தூக்கிலிட உத்தரவிடுமாறு, கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி கனகசபை தேவதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதிக்கு, அவர் அனுப்பியுள்ள கடித்தத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், “கனகசபை தேவதாசன், வயது 63, ஆகிய நான் பயங்கரவாதித் தடுப்புச் சடடத்தின் கீழ்க் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 110 6194/12 மற்றும் 110 5638/11 ஆகிய 2 வழக்குகளிலும் முறையே 20 ஆண்டுச் சிறை மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து தான் மேன்முறையீடு செய்துள்ளதுடன், இந்த வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்பி, இரண்டிலும் தனக்காக தானே வாதாடுவதாகத் தெரிவித்துள்ள அவர், ஆனாலும் மேற்படி 2 மேன்முறையீட்டு வழக்குகளும் நீதி நடைமுறையின் வீண் தாமதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக: முற்றாக முடங்கிவிட்டன எனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம், நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பு தனக்கு முற்றாக மறுக்கப்படுகிளதெனத் தெரிவித்துள்ள அவர், தனது அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறதெனவம் சாடியுள்ளார்.
‘இதனை விளக்கித் தங்களுக்கு சிறையூடாக 6 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பினேன். துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பதில் இன்னமும் வந்து சேரவில்லை. எனவே இவ்விடயத்தை இன்று வேறுவழியின்றிப் பகிரங்கப்படுத்துகிறேன்.
‘எனவே, எனது இந்த 2 மேன்முறையீட்டு வழக்குகளையும் துரித விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டு உதவுமாறும் அல்லது இந்த 2 வழக்குகளிலும் நான் பிணை பெற ஆவண செய்துதவுமாறும் கோருகிறேன்’ எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்சொன்ன கோரிக்கையை நிறைவு செய்யும் இயலுமை தங்களுக்கில்லை எனத் தாங்கள் கருதும் பட்சத்தில், அரசியல் யாப்பில் உங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது தண்டனையை மரண தண்டனையாக தரமுயர்த்தி, ‘யுத்தக் குற்றவாளி’ என தன்னைப் பிரகடனப்படுத்தி உடனடியாக, பகிரங்கமாக தன்னைத் தூக்கிலிட உத்தரவிடுமாறும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.