(வன்னி நிருபர்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாங்குளம்- துணுக்காய் வீதியில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பனிக்கன்குளம் கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.
குறித்த நான்கு கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை சூழ வெள்ளம் காணப்படுகின்ற நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் சென்று வீடுகளில் தங்க முடியாத நிலையில் இருந்த சுமார் பத்து குடும்பங்கள் நேற்று இரவு 9 மணி அளவில் இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்