தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். அச்சிறப்புவாய்ந்த தை மாதத்தையும் புதுவருடத்தையும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு வரவேற்போம்.
இவ்வாறு புத்தாண்டுக்கான வாழ்த்துச்செய்தியில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
பிறந்திருக்கும் ஆங்கில புத்தாண்டு தரணியில் வளம் சேர்க்கட்டும். மக்கள் மகிழ்ச்சியோடு நிம்மதியாக வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. புதுவருடம் கொரோனா நீங்கி ஆரோக்கியமான சூழ்நிலை சுமுகமாக திரும்ப பிரார்த்திப்போம்.
கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். கல்யாணம் பேச தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள்.
கொடுக்க வேண்டிய காசுக்கும் வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு பணம் புரளும். சுப விசேஷங்களுக்கு தை மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம் நிச்சயதார்த்தம் வளைகாப்பு கிரகப்பிரவேசம் என எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்றும் தெரிவித்துள்ளார்.