திருமறைக் கலாமன்றத்தில் சைவசித்தாந்த மகாநாடு கூட்டிய கிறிஸ்தவர் என்ற பெருமைக்கும் மதிப்பிற்கும் உரிய மரிய சேவியர் அடிகளார் என்னும் கூத்து நேசரின் மறைவு என்னை மனதை உலுக்கியது .அந்த அதிர்ச்சியான செய்தி அறிந்தவுடன், யாழ்ப்பாணத்திலிருந்தன ஜோன்சன் ராஜ்குமாருக்கு போன் பண்ணி விசாரித்தேன். “ஆம் சேர் சற்று முன்னர்தான் காலமானார்” எனச் சோகமான குரலில் பதில் கிடைத்தது.
“ஆஸ்பத்திரியில்தான் நிற்கிறோம்” என்றார் ஜோன்சன் துயரோடு.
உடைந்த அவரது மனதின் சோகம் வார்த்தைகளில் உறைந்திருந்தது. ஜோன்சன் அவரது ஓர் வளர்ப்புப் பிள்ளை.
அதே போல இன்னும் பல வளர்ப்புப் பிள்ளைகள் அடிகளாருக்கு உள்ளனர். ஜோன்சனுக்கும் இன்னும் பலருக்கும் விலாசம் கொடுத்தவர் அடிகளார். விலாசத்தின் அத்திவாரம் திருமறைக் கலாமன்றம்.
திருமறைக் கலாமன்றம் எனும் அந்த விருட்சமும், அதன் விழுதுகளும் விஸ்வரூபமாக என் முன் வந்தன. அது ஓர் செடியாக வளரத் தொடங்கிய காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அந்த திருமறை கலாமன்றத்தின் வித்தும் அவரே விருட்சமும் அவரே. ஏனையோர் விழுதுகளே. ஆனால் பிற்காலத்தில் அந்தவிருட்சத்தைத் தாங்கியவையும் அந்த விழுதுகளே.
அந்த விழுதுகள் சில பின்னாளில் அந்த விருட்சத்தின் நிழலில் செழிப்பான விருட்சங்களாகவும் வளர ஆரம்பித்தன.
யாழ் பல்கலைக்கழகத்தில் 1980 களில் ‘நாடகமும் அரங்கியலும்’ ஒரு பாடநெறியானது. நாடகம் பல்கலைக்கழகத்திற்குள் ஏன்? என முகம் சுளித்து புருவம் உயர்த்திய பேராசிரியர்களும் அங்கிருந்தனர்.
ஆயினும் அது அங்கு ஓர் பாடநெறியானது.
பல்கலைக்கழகம் ஒருபுறம் பல்கலைக்கழக மாணவரை வைத்து நாடகம் வளர்க்க மறுபுறம் நாடக அரங்க கல்லூரி, அவைக்காற்று கலைக்கழகம்,
திருமறைக் கலாமன்றம் என்பனவும் இன்னும் சில நாடக மன்றங்களும்
பல்கலைக்கழகத்திற்கு வெளியேயிருந்த நாடகக் கலைஞர்களை இணைத்து நாடகம் செய்தன. இவற்றுள் நிறுவன பலம் பெற்று நாடு தோறும் கிளைகள் நிறுவி, நூல் வெளியிட்டு, இறுவட்டு வெளியிட்டு, ஆண்டு தோறும் நாடக விழாக்கள் நடத்தி, நாடக மகாநாடுகள் நடத்தி, ஆய்வு மகாநாடுகள் கூட்டி, நாடகப் பல்கலைக்கழகமாக மக்கள் மத்தியில் வளர்ந்த இன்னொரு நாடகப் பல்கலைக்கழகமாக மக்களால் அறியப்பட்டது திருமறைக் கலாமன்றம்.
அதன் தலைமகன் மரிய சேவியர் அடிகளார். பல்கலைக்கழக உபவேந்தர் போல இன்னொரு வகையில் திருமறைக் கலாமன்றத்தின் வாழ்நாள் உபவேந்தர் அடிகளார் என்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
அவரை நான் 1980 களில் சந்திக்கிறேன். கண்டவுடன் தன் பேச்சால் என் உள்ளம் கொள்ளை கொண்டார். தன் செயல்களால் மேலும் என் மதிப்பில் உயர்ந்தார். அவர் பேச்சில் காணப்பட்ட அந்த நேர்மை, உண்மை, அர்ப்பணிப்பு, புரிந்துணர்வு என்னை அவர்பால் ஈர்த்தன. அவரது ஆழமான நூல் புலமையும் தேடலும் அவர் செயல்களும் வியப்பளித்தன. அவர் மூன்று பி.எச்.டி. பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்பதும் தெரியவந்தது. அதில் ஒன்று சைவசித்தாந்தம் பற்றியது.
தொடர் உரையாடலில் ஈழத்துக் கூத்து பற்றிய நோக்கில் இருவரது போக்கும் ஒன்றே என்பதை அறிந்து கொண்டோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.
அப்போது நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். 1980களில் திருமறைக் கலாமன்றம் நடத்திய கூத்துப் பயிற்சி பட்டறைகளுக்கு என்னை அழைத்தார். அவர் மூலம் யாழ்ப்பாணக் கூத்தர் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமறை கலாமன்றக் கலைஞர்களுக்கு மட்டக்களப்புக் கூத்தைப் பழக்கவும், நான் அவர்களிடமிருந்து யாழ்ப்பாணக் கூத்தை பயிலவுமான சந்தர்ப்பத்தை அடிகளார் ஏற்படுத்தித் தந்தார்.
ஈழத்துக் கூத்து அகராதி ஒன்றும் ஈழத்துக் கூத்துக் கலைக்களஞ்சியம் ஒன்றும் கூத்தில் துறைபோனவர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்க வேண்டும் எனும் மிகப் பேரவா ஒன்று அவரிடம் இருந்தது. இது சகல அறிவு வசதிகளும் கொண்ட பல்கலைக்கழகம் கொள்ள வேண்டிய பேரவா அல்லவா?
கூத்தை புதிய திசைகளில் காலத்துக்கு ஏற்ப கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் கிராமங்களில் கூத்தை அதன் பாட்டில் வளர விட வேண்டும் என்பதிலும் இருவரும் ஒத்த கொள்கையினராக இருந்தோம்.
2005 இல் நாம் தயாரித்த ‘இராவணேசன்’ வடமோடி நாடகத்தை யாழ்ப்பாணம் அழைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முன் காண்பிக்க வைத்தார். அவர் அழைப்பின் பேரில் 40 பேர் கொண்ட எமது மாணவர் குழுவுடன் அங்கு சென்ற நாம் அதனை திருமறைக் கலாமன்ற திறந்தவெளி அரங்கிலும் யாழ் பல்கலைக்ழகத்திலும் உடுவில் மகளிர் கல்லூரியிலும் காட்டி வந்தோம்.
அழைப்பு போக்குவரத்துச் செலவுகள் தங்குமிடச் செலவுகளை அவரது கலாமன்றமே ஏற்றிருந்தது. 1991 இல் நான் மட்டுநகர் வந்து விடுகிறேன். எனினும் தொடர்ந்தும் சேர்ந்தியங்கினோம். அடிக்கடி அடிகளாரோடு போனில் உரையாடுவேன்.
சமீப காலம் வரை உரையாடினேன். அவர் நோய்வாய்ப்பட்ட பின் அந்த உரையாடலும் குறைந்து விட்டது.
இனி அவருடன் உரையாடவே முடியாது. யாழ்ப்பாணம் இனி மரியசேவியர் அடிகள் இல்லா யாழ்ப்பாணம்.
நண்பரே என விழிப்பதா? பாதர் என அழைப்பதா? முன்னைய விழிப்பே என்னை அவருடன் இறுகப் பிணைக்கிறது.
நண்பரே என் அருமை நண்பரே, சென்று வாருங்கள். காலம் உங்களுக்கு இட்ட பணியினைக் கச்சிதமாக முடித்துச் செல்கின்றீர்கள்.
பேராசிரியர்
சி. மௌனகுரு