யாழ்ப்பாணத்தில் ரகசிய திருமண வைபவம் நடத்தியவர்களை காட்டிக் கொடுத்த புகைப்படப் படங்கள் மூலம் மண்டபத்தை விட்டு ஓடிச் சென்றவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சுகாதாரப்பிரிவினர் மற்றும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். மேற்படி இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் ஏனைய சாதனங்களின் ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்று 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் அறியப்படுவதாவது.
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விடயத்தில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் தப்பி ஓடி இருந்தனர். மணமக்கள் வீட்டார் , குருக்கள் , புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் தடுத்து வைத்து தொடர் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளனர்.