“இலங்கையின் முன்னாள் பிரதமரான எஸ்.டப்ளியூ. ஆர். டி பண்டாரநாயக்க குடும்பம் இலங்கையை ஆண்ட காலப் பகுதியிலேயே இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் பெருமளவில் அறிந்து கொண்டன. அதற்கு அடுத்ததாக, நான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் தான் எமது நாடு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவை நாம் பெறக்கூடியதாக இருந்தது.
பின்னர் தொடர்ந்து நாட்டில் தோன்றிய பிரச்சனைகள் காரணமாகவே அதிலும் அவற்றில் பலவற்றுக்கு தீர்வைக் காண வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் ஆதரவு வழங்கத் தொடங்கினோம்”
இவ்வாறு தெரிவித்துள்ளார், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் மத்திய கொழும்பு ஆசனத்திற்கான கட்சி மத்தியகுழு நியமன நிகழ்வு ஞாயிற்றக்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மத்திய கொழும்பு ஆசனத்தில் மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள சுதந்திரக்கட்சியின் அனைத்து ஆசனங்களும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு புதிய மத்தியகுழு நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, கட்சியை மேலும் வலுப்படுத்தி, நாட்டுமக்களின் ஆதரவைத் திரட்டிக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் பொதுச்செயலாளர்களாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவர் நியமிக்கப்பட்டார்கள்.
அவரைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய சிறிமாவோ பண்டாரநாயக்கவும் நாட்டின் பொருளாதாரத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தினார்.
அக்காலப்பகுதியில் முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் ‘யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது?’ என்ற அதிகாரப்போட்டியொன்று காணப்பட்டது.
அதன்காரணமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு இயங்கக்கூடிய வகையிலான வெளிநாட்டுக்கொள்கை பேணப்பட்டது.
அதேபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைள் ஊடாக அனைத்து சர்வதேச நாடுகளும் எமது நட்புநாடுகளாகத் திகழ்ந்தன.
அவரைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்கூட மிகவும் சிறந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
அதன்பின்னர் மகிந்த ராஜபக்ஷ போரை முடிவிற்குக்கொண்டுவந்து நாட்டினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தலைவர் என்றவகையில் ஒருமித்த நாட்டை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்றார்.