யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் என்று பெயரிட்டு அழைக்கப்பெற்ற உயர் கல்விக் கூடம் தற்போது வவுனியா பல்கலைக் கழகம் என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டதனால் அதற்கு புதிய துணைவேந்தர் ஒருவரை,
இலங்கை ஜனாதிபதி நேற்று நியமனம் செய்தார்.
புதிய துணைவேந்தராக நியமனம் பெற்ற கலாநிதி ரி. மங்களேஸ்வரன் அவர்கள் இன்று 14ம் திகதி புதன்கிழமை காலை தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவர் இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் மதகுருமார்களிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.
நியமனத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீண்டகால சவால்களுக்கு மத்தியில் பல்கலைகழகம் என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். இதற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர் என அனைவரும் பங்காற்றியுள்ளனர்.
இதனை மேலும் விருத்தி செய்வதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியமானது. மூன்று வருடங்களிற்கு குறித்த பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில் இந்த பிரதேசத்தின் நாட்டின் அபிவிருத்தியில் நாம் பாரிய பங்களிப்பினை வழங்குவோம். எதிர்வரும் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எமது பல்கலைகழக செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்றார்.
இங்கே காணப்படும் படங்களில் புதிய துணைவேந்தருக்கு தவில் நாதஸ்வர வாத்தியங்களோடு வரவேற்பு அளிக்கப்படுவதையும், தனது துணைவேந்தர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்பதையும் காணலாம்