(மன்னார் நிருபர்)
(24-08-2021)
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு எந்த ஒரு அரசு சலுகைகளும் பெறாதவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை (24) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
‘கொரோனா’ தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான 10 நாட்கள் நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க நிலையை பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் தொழில் வாய்ப்புகளை இழந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் இடம் பெற்று வருகிறது.
இந்த 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையானது கர்ப்பிணி தாய்மார்கள் ,சிறுநீரக நோயாளிகள் , வயோதிபர் கொடுப்பனவு , ஓய்வூதிய கொடுப்பனவு , சமூர்த்தி போன்ற எந்த ஒரு கொடுப்பனவுகளும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 8700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.