இந்திய வம்ச வழியானா ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது குடியேற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை வடிவமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் இங்கிலாந்தின் தென்கிழக்கு கடலோர பகுதிகளின் வழியாகச் சிறிய படகுகள் மூலம் 45 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த சட்டவிரோத நுழைவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருவதால் இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க ரிஷி சுனக் தலைமையிலான இங்கிலாந்து அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் சட்டவிரோத குடியேற்றச் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் படி, சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைபவர்கள் புகலிடம் கேட்க முடியாது.
அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என ரிஷி சுனக் கடுமையாகக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடியேறினால் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது சொந்த நாட்டிற்கோ அல்லது ருவாண்டா போன்ற நாடுகளுக்கோ நாடு கடத்தப்படுவார்கள் எனவும் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கு உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மென்னுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிட்டத்திற்கு இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது நடைமுறைக்குப் பொருந்தாத சட்டம் என்றும், இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டத்தைக் கடந்த ஆண்டே நடைமுறைப்படுத்த இங்கிலாந்து அரசு முன்வந்தது. ஆனால் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.