உலகில் சில மனிதர்கள் விசித்திரமான செயல்களில் ஈடுபட்டு பலரையும் திகைக்க செய்து பரபரப்பில் ஆழ்த்துவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அப்படித்தான் அமெரிக்காவில் ஒரு நபர், வினோத காரணத்திற்காக வங்கிக்கு கொள்ளை அடிக்க சென்றுள்ளார்.
அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி என்ற நகரம் உள்ளது. அங்குள்ள லெல்ஸ் பார்கோ வங்கியில் கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று வயதான நபர் நுழைந்துள்ளார். அவர் தனது கையில் துண்டு சீட்டு ஒன்று வைத்திருந்த நிலையில், வங்கி ஊழியரிடம் அதை நீட்டினார். அதில் வங்கியை கொள்ளையடிக்க போகிறேன் என எழுதி இருந்தது.
இதை பார்த்ததும் வங்கி ஊழியர்கள் பரபரப்பு அடைந்தார்கள். தொடர்ந்து அந்த நபர், நான் இந்த வங்கியில் ஒரு அமெரிக்க டாலர் பணத்தை மட்டுமே கொள்ளை அடிக்க வந்துள்ளேன். இதை செய்வதற்கு என்னை ஊழியர்கள் மன்னிக்க வேண்டும். ஒரு டாலர் பணத்தை தந்து விடுங்கள் என்று திகைக்க வைக்கும் திருட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
குழப்பமடைந்த ஊழியர்கள் ஒரு டாலர் பணத்தை கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அந்த நபர் வங்கியின் லாபி பகுதியில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துள்ளார். ஊழியர்களோ அவரிடம் வங்கியைவிட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அந்த முதியவரோ நான் வங்கியை திருட வந்தவன் எனவே போலீசை கூப்பிடுங்கள் என்றுள்ளார்.
இதென்ன வம்பா இருக்கே என்று நினைத்த ஊழியர்கள் வேறு வழி இன்றி போலீசை அழைக்க அந்த நபர் போலீசாரிடம் திருடிய ஒரு டாலர் பணத்தை ஒப்படைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.பின்னர் போலீசார் விசாரணையில் அவர் தனது பெயர் டோனால்டு சன்டாக்ரோசே என்று கூறி தனது திருட்டு செயலுக்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
இவருக்கு மத்திய சிறைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் எனவே தான் இந்த திருட்டை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு வேலை தன்னை சிறைக்கு அழைத்து செல்லவில்லை என்றால் சிறையில் அடைக்கும் வரை வேறு ஒரு வங்கியில் திருடிக்கொண்டே இருப்பேன் என மிரள வைக்கும் வாக்குமூலத்தை தந்துள்ளார். இவர் சிறை செல்ல வேண்டும் ஏன் இப்படி அடம் பிடிக்கிறார் என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து காவலில் எடுத்த காவல்துறை இரு நாள்கள் கழித்து விடுவித்துள்ளது.