உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோத குடியேற்ற விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக குடியேறும் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
இவ்வாறு பிரிட்டன் நாட்டில் இந்தியர்கள் பலர் சட்ட விரோதமாக குடியேறும் எண்ணிக்கை கடந்தாண்டு வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தற்போது பிரதமராக உள்ளார். இவர் தலைமையிலான அரசுக்கு வெளிநாட்டினர் குடியேற்றம் விதிகள் தொடர்பாக தொடர் அழுத்தம் வந்த வண்ணம் உள்ளன.
2015இல் இருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து பிரிட்டன் நாட்டிற்கு அடைக்கலம் புகுந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, இதை கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்ட விதிகள் மேற்கொள்ள அரசுக்கு அந்நாட்டை சேர்ந்த பலரும் அழுத்தம் தந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியர்கள் பலர் சிறிய படகுகளில் பிரிட்டீஷ் கால்வாய் மூலம் பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018,19 ஆகிய ஆண்டுகளில் இது போன்ற குடியேற்றம் இல்லை என கூறிய அமைச்சகம், 2020இல் 64 பேரும், 2021இல் 67 பேரும் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறியதாக தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கையாது கடந்தாண்டு 683 பேர் என வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக நுழைபவர்களை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப இந்தியா, பாகிஸ்தான், செர்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே, இவர்கள் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கூறினார்.