கழிவறை இருக்கையில் அதிகளவு பாக்டீரியா இருப்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அதை விட நாம் தினமும் உபயோகப்படுத்தும் குடிநீர் பாட்டிலில் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் நம்பமுடியுமா? ஆனால் அது தான் உண்மை. கழிவறை இருக்கையில் உள்ளதை விட சுமார் 40 ஆயிரம் மடங்கு அதிகமாகன பாக்டீரியாக்கள் மீண்டும் பயன்படுத்தும் பாட்டிகளில் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த அளவிற்கு குடிநீர் குடிக்கும் பாட்டிலில் பாக்டீரியா இருப்பது எப்படி என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம். ஒரு பாட்டிலை ஒரு முறை உபயோகப்படுத்தினால் எந்த வித பிரச்னையும் இருக்காது. ஆனால் மீண்டும் பயன்படுத்தும் பாட்டில்களைப் பொருத்தவரை பாக்டீரியாக்கள் உருவாக ஏதுவாக அமைந்துவிடுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
waterfilterguru.com என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பலவிதமான பாட்டில்களைக் கொண்டு ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் gram-negative rods மற்றும் bacillus என்ற இரண்டு பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் படி, gram-negative bacteria என்பது உடலில் தொற்றுகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல், bacillus பாக்டீரியா இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாக்கள், சமையலறை சிங்கில் உள்ளதை விட 2 மடங்கு அதிகம். கம்பியூட்டர் மெளஸ்ஸில் உள்ளதை விட 4 மடங்கு அதிகம் மற்றும் வளர்ப்பு பிராணியின் தண்ணீர் கின்னத்தை விட 14 மடங்கு அதிகம் என்று ஆய்வில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர் நிபுணர் மற்றும் உதவி பேராசிரியர் கியோங் யாப் கூறுகையில், ’பாட்டில்களில் உள்ள பாக்டீரியா கேடு விளைவிப்பது கிடையாது என்று தெரிவித்தார். மேலும் லண்டனைச் சேர்ந்த மூலக்கூறு நுண்ணுயிரியலாளர் டாக்டர். ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ் கூறுகையில், மனித வாய் ஏராளமான பாக்டீரியாக்களுக்கு வீடாக இருக்கிறது. அப்படி இருக்கப் பாட்டிலில் இருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் இதர வகை பாட்டில்களை காட்டிலும் squeeze-top பாட்டில்களில் பாக்டீரியாவின் அளவு குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கையில், இந்த பாக்டீரியாக்களினால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாது என்று கூறுகின்றனர். தினமும் மீண்டும் பயன்படுத்தும் பாட்டில்களை சுடுதண்ணீரில் கழுவது அவசியமாகவுள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.