தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வருத்தெடுத்து வருகிறார் டிரம்ப். ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான் என்கிறார் டிரம்ப். அதோடு தான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்றும் பேசியுள்ளார் டிரம்ப். வரும் 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் அதிபர் ஆனால் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகள் வந்து சேரும் என்று அடித்துச் சொல்கிறார் டிரம்ப்.
தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புதினுடன் பேசி வெறும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தச் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார் டிரம்ப். தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இப்போது உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வரும் பைடன், அடுத்து அணு ஆயுதங்களை வழங்குவார் என்றும், இது உலகிற்கே பேராபத்தாய் முடியும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இது போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அப்படி ஏற்படாமல் தடுக்கும் வல்லமை தனக்கு மட்டுமே இருப்பதாகவும் பரப்புரையின் போது கூறி தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உலகின் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அதற்காக இப்போதிருந்தே தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
ஜனநாயக கட்சியை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், சொந்தக் கட்சியில் இருந்தே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சா வழி கோடீஸ்வரரான விவேக் ராமசாமி, ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதராக பணியாற்றிய நிக்கி ஹாலே உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். இது டிம்பிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.