ஐரோப்பிய நாடான பின்லாந்தில் நடைபெற்ற நாடாளுன்ற தேர்தில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று சன்னா மரின் என்ற 34 வயது இளம் பெண் பிரதமரானார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்ற நிலையில், 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இவரின் செயல்பாடுகள் பல விமர்சனங்களை பெற்றன.
பிரதமராக இருந்து பொறுப்பில்லாத முறையில் செயல்படுகிறார். செலவீனங்களை அதிகரித்து நாட்டை கடனாளி ஆக்கியுள்ளார். நாட்டின் எரிசக்தி தேவை பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளியுள்ளார் போன்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. ஒரு முறை நணபர்களுடன் பார்டி செய்து ஜாலியாக இருந்த வீடியோக்கள் வெளியான நிலையில், இது போன்ற சம்பவங்கள் அவர் மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தின.
அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பின்லாந்தில் நேற்று நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல் மும்முனை போட்டியாக இருந்தது. மத்திய-வலதுசாரி கூட்டணி, வலதுசாரி தி பின்ஸ் கட்சி, சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சி ஆகிய மூன்றும் மோதின. இதில் பிரதமர் சன்னா மரின் கட்சி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மொத்தம் பதிவான வாக்குகளில் 20.7 சதவீத வாக்குகளை பெற்ற மத்திய-வலதுசாரி கூட்டணி முதலிடத்தையும், தி பின்ஸ் கட்சி 20.1 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றன. ஆளும் கட்சியான சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சி 19.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.