காதல் தரும் சுகத்தைவிட அதன் பிரிவு தரும் வலி மிகவும் தீவிரமானது என்பதற்கு உதாரணமாக சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் உள்ள டாஸ்ஹூ பகுதியில் கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு நபர் கையில் பூங்கொத்துகளுடன் ஒரு அலுவலகத்தின் முன் வந்துள்ளார். திடீரென்று அலுவலகத்தின் முன் மண்டியிட்டு காத்திருக்க தொடங்கினார் அந்த நபர்.
நேரம் போக போக அப்பகுதியில் இருந்த மக்கள் ஒன்று புரியாமல் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது தான் அந்த நபரின் செயலுக்கான காரணம் விளங்கத் தொடங்கியது. அந்த நபரின் காதலி சில நாள்களுக்கு முன்னர் பிரேக் அப் செய்து பிரிந்து சென்றுள்ளார். காதலி பிரிந்த வலியை அந்த நபரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே, காதலி வேலை செய்யும் அலுவலகத்தின் முன் மண்டியிட்டு காதலியின் மனதை சமதானப்படுத்த இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார். மார்ச் மதியம் 1 மணிக்கு மண்டியிட்ட அந்த நபர் அங்கிருந்து மணிக்கணக்காக நகரவே இல்லை. அதற்குள்ளாக மழை பெய்துள்ளது. குளிர்காற்று வீசியுள்ளது. அதற்கெல்லாம் அவர் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. வேண்டாம் திரும்பி சென்றுவிடுங்கள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவர் கேட்பதாக இல்லை.
ஆனால், அவரின் காதலி மட்டும் சீனுக்குள் வரவே இல்லை. அவர் அங்கு இருந்தாரா என்று கூட தெரியவில்லை. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அந்த நபரை வெளியேற சொல்ல கேட்டு பார்த்தனர். நான் ஏதாவது சட்ட விரோதமாக செய்கிறேனா. என் விருப்பப்படி ஒரு ஓரமாக மண்டியிட்டு நிற்கிறேன் என்னை தனியாக விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
காவல்துறையும் பின்னர் கிளம்பிவிட்டனர். இரவு முழுக்க அப்படியே அங்கு இருந்த நிலையில், அடுத்த நாள் காலை 10 மணி வரை இடத்தை விட்டு நகராமல் மண்டியிட்டுக்கொண்டே இருந்துள்ளார். இப்படி இருந்தும் காதலி அங்கு வந்தபாடு இல்லை. சுமார் 21 மணிநேரம் போராடி பார்த்தபின்னர் குளிரை தாங்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் அந்த நபர்.