பிரிட்டன் மன்னராக 3ஆம் சார்லஸ் முடி சூட்டிக்கொண்ட விழா கடந்த 6ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 2,300 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
70 ஆண்டு காலமாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்டபோதிலும் அவரின் முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் 3ஆம் சார்லசின் முடிசூட்டு விழா அவரது மனைவி கமிலா உள்ளிட்ட அரச குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முடிசூட்டு விழாவில் பேய் போன்ற மர்ம உருவம் வந்ததாக பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அரசர் அரியணை ஏறுவதற்காக அரங்கில் ஊர்வலமாக வந்து சேர்ந்தார். அவர் வருகைக்குப் பின் மண்டப நுழைவு வாயில் அருகே கையில் ஆயுதத்துடன் மர்ம உருவம் வீடியோவில் குறுக்கே கடந்து செல்கிறது.
Is the grim reaper at Westminster Abbey? Or is that Princess Diana seeking vengeance? #Coronation #Coronation2023 pic.twitter.com/fvlUrngxtm
— Winnie (@fentywinnie) May 6, 2023
இந்த மர்ம உருவம் கிரிம் ரீப்பர் என்று இணையவாசிகள் புரளியை கிளப்பி வருகின்றனர். மேற்கத்திய தொன்மபடி கிரிம் ரீப்பர் என்பவர் மரணத்தின் முன்னோடி, மரணத்தின் போது மனித ஆன்மாவை எடுத்து செல்லும் நபர் என்று கருதப்படுகிறது.எனவே, இந்த அபாய மர்ம சக்தி தான் நிகழ்விற்கு வந்துள்ளதாக பலரும் பேசி வருகின்றனர்.
ஆனால், அது பேயோ, பூச்சாண்டியாக இருக்க வாய்ப்பில்லை, அரங்கில் இருந்த மது குருக்களில் யாரோ ஒருவர் நடந்து சென்ற நிழல் தோற்றம் தான் அப்படி வீடியோவில் பதிவாகி இருக்கும் என விளக்கம் தரப்படுகிறது.