காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தலையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானில், ஜுன்ஜுனு நகரில் நடைபெற்ற கட்சி பேரணியில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும். 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500 என்ற விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்” என்றார். பேரணியில் முதல்வருடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.