சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அந்த சமயம் கட்சி அலுவலகத்துக்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் , இந்திய கமியூனிஸ்டு கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கை:
“இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மீது 27.10.2023 இரவு சமூக விரோதக் கும்பல்கள் பாட்டிலையும், கற்களையும் வீசி தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமூக விரோத கும்பலின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிககள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகம் சென்னை மாநகரில், 43 செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. 1973 ஆண்டு விமான விபத்தில் இறந்து போன கட்சி தலைவர் கே.பாலதண்டாயுதம் நினைவாக “பாலன் இல்லம்” என்ற பெயரில் அமைந்த கட்சி அலுவலகம் எட்டு மாடிக் கட்டிடமாக புதுப்பித்து,இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தாமஸ் சாலையில் 27.10.2023 இரவு 7.45 மணி முதல் 9.30 மணி வரை சமூக விரோத விஷமிகள் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கட்சி அலுவலக பாதுகாவலர் உள்ளிட்ட பணியாளர்கள் தாக்குதல் நடத்தும் நபர்களைக் கண்டறியும் முயன்ற போது, எங்கோ பதுங்கி விடுகின்றனர். அக்கம், பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தால் அவர்கள் எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், காவல்துறையினர் இருந்த இடம் நோக்கி கற்களும், பாட்டிலும் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் ஐந்து நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளின் சட்ட விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கோரியுள்ளார்