‘விரைவில் இரு கட்சிகளையும் பாஜக விழுங்கி விடும்’ என்கிறார், திருமாவளவன்
அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பங்கேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம் பி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூருக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் இந்த தேர்தலில் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்கப் போவதாகவும் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள். இதில் பாஜகவினர் சொற்ப அளவிலே உள்ளனர் இப்படியே போனால் அதிமுகவையும் பாமகவையும் பாஜக விழுங்கிவிடும். இதற்கு நாட்டில் பல உதாரணங்கள் உள்ளன.
பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்து மதத்தை எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டரை பொருத்த தடை விதிக்க வேண்டும். இதனால் ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே தமிழக அரசு ஸ்மார்ட் மின்மீட்டரை வைக்க அனுமதிக்கக் கூடாது.
மோடி ஏழை மக்களை ஏமாளி என நினைத்துக் கொண்டு நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கூறி வருகிறார். இது முற்றிலும் தவறானது. ஏழை மக்கள் வரும் நாடாளுமன்றத்தில் இதற்கு பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.