அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர், பாஜக நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, அதிமுக-வில் இணைவது அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவரும், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகனுமான அசோக்குமார் அதிமுக-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அசோக்குமார் நம்மிடம் பேசுகையில், “தொடக்கத்திலிருந்தே `ஆற்றல்’ அறக்கட்டளை மூலம் மக்களுக்கான சேவையைச் செய்துவருகிறேன். எனது பயணத்தில் அ.தி.மு.க-வில் இணைந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தோன்றியது. மற்றபடி எம்.பி சீட்டைக் குறிவைத்து அ.தி.மு.க-வில் இணையவில்லை. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை. கட்சியில் பதவி வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க-வில் இணையவில்லை. எனக்கு ஃபிளக்ஸ் அரசியல் செய்யத் தெரியாது.
அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தவரை நலத்திட்ட நிகழ்ச்சிகள் எந்தப் பிரச்னையும் இன்றி நடைபெற்றன. கூட்டணி முறிவுக்குப் பிறகு, பாஜக நிர்வாகி என்றரீதியில்தான் என்னை அணுகுகின்றனர். இதனால், பல இடங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்” என்றார்.