திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்தது.
திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள கிள்ளிப் பாலத்தில் கரிமடம் காலனி உள்ளது. இங்கு போதை பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால், போலீசார் அதை கண்டு கொள்வது இல்லை. இந்த பகுதியை சேர்ந்த அலியார் என்பவரின் மகன்களான அல் அமீன்(21), அவருடைய தம்பி அர்ஷாத்(19) ஆகியோர் போதைப்பொருள் விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இவர்கள் ‘மடத்தில் பிரதர்ஸ்’ என்ற பெயரில் கிளப் ஒன்றை தொடங்கி அந்த பகுதி முழுவதும் போதை எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இது போதை பொருள் கும்பலுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நவ 21 அன்று அர்ஷாத்தையும், அல் அமீனையும் பேச்சுவார்த்தைக்கு என்று கூறி போதை பொருள் கும்பல் வரவழைத்துள்ளது. அப்போது திடீரென அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அல் அமீனையும், அர்ஷாத்தையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அர்ஷாத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் போர்ட் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கரிமடம் காலனி பகுதியைச் சேர்ந்த தனுஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.