லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ’தலைவர் 170’ படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “இந்தியன் 2” லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இதேபோல் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்குத் நடைபெறுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் படப்பிடிப்பு இடத்திற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 படப்பிடிப்பு இடத்திற்கு வந்து, ரஜினிக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.