நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவுபெற்றுள்ளது. மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை காணொலி மூலமாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது