சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்த்தோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய பெருமைக்குரியவர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.
உயர்வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்தவர், எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராதவர் வி.பி. சிங்.
இத்தகைய ஒப்பற்ற தலைவரான .வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20.4.2023 அன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூகநீதிக் காவலர், மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் முழு திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (நவ 27) காலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வி.பி. சிங் சிலையைத்திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை கலைவாணர் அரங்கில் வி.பி சிங் திறப்பு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.